tamil

தொடக்க, நடுநிலைப் பள்ளிக்கு 40 ஆயிரம் தூய தமிழ் அகராதிகள்

Jayaseeli | Monday, May 22, 2017 9:42 AM IST

அரசு மற்றும் உதவிபெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு இந்த கல்வியாண்டில் 40 ஆயிரம் துாய தமிழ் அகராதிகள் வழங்கப்பட உள்ளன. 

தாய்மொழி பற்றை வளர்க்க, நல்ல தமிழ் சொற்கள் கொண்ட அகராதி தயாரிப்பதற்கு, சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்குனர் தலைமையில் வல்லுனர் குழு அமைக்கப்பட்டது. அக்குழு பரிந்துரையில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கற்பிக்கும் வகையில் துாயதமிழ் அகராதியை தமிழறிஞர்கள் தயாரித்து உள்ளனர். இதில், வண்ணப்படங்களுடன் ஏராளமான தமிழ்சொற்கள் இடம்பெற்றுள்ளன. 

அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளுக்கு 40 ஆயிரம் அகராதிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. குறிப்பிட்ட பாடவேளையில் மாணவர்களுக்கு துாய தமிழ்ச் சொற்கள் கற்பிக்கப்படும். இந்த அகராதிகள் தற்போது உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்போது தமிழ்மொழியில் அதிகளவில் வடமொழி, ஆங்கிலச் சொற்கள் கலந்துள்ளன. அவற்றையே தமிழ்சொற்களாக பாவிக்கும் நிலைஉள்ளது. இதனால் பிறமொழி கலக்காத துாய தமிழ்சொற்களை ஆரம்பக் கட்டத்திலேயே மாணவர்களுக்கு கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.