tamil

காய்ச்சல் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தல்!

Webdesk | Wednesday, October 24, 2018 5:14 PM IST

தமிழகத்தில், தென்மேற்கு பருவமழை முடிந்து, வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளது.இதற்கு இடைப்பட்ட காலத்தில், லேசான மழை பெய்வதால், சில இடங்களில் மழை நீர் தேங்கி, அவற்றின் வாயிலாக, டெங்கு கொசு உற்பத்திஆகியுள்ளது.உயிரிழப்புகள்எனவே, மாநிலம் முழுவதும், டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவுகின்றன. காய்ச்சல் காரணமாக, பல இடங்களில், குழந்தைகள், சிகிச்சை பலனின்றி உயிரிழக்கும் சம்பவங்களும் நடக்கின்றன.

அதனால், காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். பள்ளிகளில் நிலவேம்பு குடிநீர் வழங்கவும், மருத்துவ முகாம் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், பல தனியார் மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சார்பில், மாணவர்களுக்கு, எஸ்.எம்.எஸ்., மற்றும், இ - மெயில் வழியாக, அறிவுரைகள் அனுப்பப்பட்டு உள்ளன.

அதில், கூறியிருப்பதாவது:தற்போது, வைரஸ் காய்ச்சல் பரவுவதால், குழந்தைகளுக்கு நோய் பரவாமல், பெற்றோர் பார்த்து கொள்ள வேண்டும். காய்ச்சல் இருக்கும் குழந்தைகள், பள்ளிக்கு வந்தால், அவர்களிடம் இருந்து, மற்றவர்களுக்கும் காய்ச்சல் பரவும் நிலை உள்ளது. எனவே, காய்ச்சல் இருந்தால், பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம். மருத்துவரிடம் காண்பித்து, அவர்களின் உடல் நலனில் அக்கறை செலுத்தவும்.

சில பெற்றோர், இதுகுறித்து விழிப்புணர்வு இல்லாமல், லேசான காய்ச்சல் என நினைத்து, பள்ளிக்கு அனுப்பி விடுகின்றனர். ஆனால், அந்த குழந்தைகளுக்கு, திடீரென உடல் நிலை மோசமாகி விடுகிறது.எனவே, பிள்ளைகளின் உடல்நலனில், பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதுவரை, பள்ளிக்கு பிள்ளைகளை, அனுப்ப வேண்டாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.