tamil

‘குரூப் - 4’ தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்...

Webdesk | Tuesday, December 12, 2017 8:07 AM IST

தமிழகத்தில் உள்ள அரசு துறைகளில், குரூப் - 4 பதவியில், 9,351 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான போட்டி தேர்வு, பிப்., 11ல், தமிழகம் முழுவதும் நடத்தப்படுகிறது. இவற்றில் முதன்முதலாக, கிராம நிர்வாக அதிகாரி பதவிக்கான, 494 இடங்களும், தேர்வில் இடம் பெறுகின்றன.
 
தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு, நவ., 14ல் துவங்கியது. இந்த பதிவு, நாளையுடன் முடிகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் இந்த தேர்வில், ஆணையத்தின், www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில், பதிவு செய்வதற்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை, 14 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

மொத்தம், 17 லட்சம் பேர் விண்ணப்பிப்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை, ஆன்லைனில் புதிய சலுகையை, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. அதாவது, தமிழக அரசின் பணியாளர் சீர்திருத்த சட்டத்தின்படி, போட்டி தேர்வுக்கு வழங்கப்பட்ட சலுகையை மீறி, கட்டணமின்றி விண்ணப்பித்தோர், தங்கள் விண்ணப்பத்தை ஆய்வு செய்து, கட்டணம் செலுத்தவும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.