tamil

தொடக்கப் பள்ளி மாணவர்களை ஆங்கிலத்தில் பேச வைக்கத் திட்டம்...!

Webdesk | Monday, December 11, 2017 7:36 AM IST

தமிழகத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களை பாடல்கள், எளிய வார்த்தைகள் மூலமாக ஆங்கிலத்தை சரளமாகப் பேச வைப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.தமிழகத்தில் சில நாள்களுக்கு முன்னர் வெளியான புதிய வரைவுப் பாடத் திட்டம் குறித்து இணையதளம் மூலம் கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பல்வேறுகருத்துகள் பெறப்பட்டன. அதில் மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளி மாணவர்களை ஆங்கிலத்தில் பேச வைக்க வேண்டும் என பலர் வலியுறுத்தியிருந்தனர்.

இதற்கான நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித் துறை ஏற்கெனவேமேற்கொண்டு வந்த நிலையில் தற்போது பொதுமக்களின் கருத்தையும் பரிசீலித்து அதற்கான திட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்துடன், அனைவருக்கும் கல்வித் திட்டம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், இந்த ஒப்பந்தத்தின்படி முதல் கட்டமாக சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை ஆங்கிலத்தில் பேசவைக்க முடிவு செய்துள்ளோம்.

90 தலைமையாசிரியர்களுக்குப் பயிற்சி:

ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை ஆங்கிலத்தில் சரளமாகப் பேச வைக்க தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கத் திட்டமிடப்பட்டது.அதன்படி சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 90 தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பயிற்சி முடித்த தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிப்பர்.

ஆசிரியர்கள் மாணவர்களை எளிதில் ஆங்கிலத்தில் பேச வைப்பதற்கான செயல்பாடுகளை மேற்கொள்வர். புத்தகங்கள் - சி.டி.க்கள்... ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியருக்கும் 90 வகையான புத்தகங்கள், 4 சி.டி.க்கள் ஆகியவை அனைவருக்கும் கல்வி திட்டம் மற்றும் தனியார் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டுள்ளன. இந்த முயற்சி வெற்றி பெற்றால் மேலும் சில மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்றனர்.