tamil

அரசு மேல்நிலைப் பள்ளியில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடக்கம்!

Webdesk | Thursday, August 30, 2018 8:46 AM IST

சென்னை எழும்பூர் மாநில மகளிர் அரசு மேல்நிலைப் பள்ளியில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளதால், பெற்றோர் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களிலும் தலா ஒரு மாதிரிப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு ப்ரீ கே.ஜி., எல்.கே.ஜி., யூ.கே.ஜி.ஆகிய வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன. முதற்கட்டமாக சென்னை எழும்பூர் மாநில மகளிர் அரசு மேல்நிலைப்பள்ளி, மாதிரிப் பள்ளியாக மாற்றப்பட்டு, அங்கு மழலையர் வகுப்புகளும் தொடங்கப்பட்டுள்ளன.

தனியார் பள்ளிகளுக்கு நிகராக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், ஸ்மார்ட் வகுப்பறைகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள மாதிரிப் பள்ளியில்  தற்போது மாணவர் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, பெற்றோர் தனியார் பள்ளிகள் மீதான மோகத்தை தவிர்த்து, முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படும் அரசு மாதிரிப்பள்ளியில், வரும் அக்டோபர் 3ஆம் தேதி விஜயதசமியன்று, குழந்தைகளை பெற்றோர் சேர்க்குமாறு, பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.