தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கபட்டுள்ளது.
கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான எழுதுத்தேர்வு, கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. இந்நிலையில் அப்பதவிக்கான காலிப்பணியிடங்களை நிரப்பும் நோக்கில் டிசம்பர் 19ம் தேதி முதல் 23ம் தேதி வரை சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. தலைமை அலுவலகத்தில் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் பதிவெண் பட்டியல் மற்றும் தரவரிசையின்படி கால அட்டவணைப் பட்டியல் http://www.tnpsc.gov.in வெளியிடப்பட்டுள்ளது.
கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு அழைப்பாணை விரைவஞ்சல், குறுஞ்செய்தி வாயிலாக விரைவில் அனுப்பப்பட உள்ளதாக டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.
குறிப்பிடப்பட்ட தேதியில் கலந்தாய்வுக்கு வரத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது எனவும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.